பள்ளி மற்றும் உயர்கல்வி ஆகிய இரண்டு பெரும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை என்பதை ஒன்றிய அரசின் 2024-25 பட்ஜெட் உணர்த்துகிறது.
அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளையும் கற்றல் திறனையும் மேம்படுத்த குறிப்பிட்ட திட்டங்கள் இல்லை. பள்ளிக் கல்விக்கும் எழுத்தறிவுக்கும் ஆன பட்ஜெட் ஒட்டுமொத்தமாக 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2023 பட்ஜெட்டில் இது ரூ. 72,474 கோடியிலிருந்து இப்போது 2024 -25 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.73,008 கோடி என்பது மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
யுஜிசி நிதி 60% வெட்டு
உயர்கல்விக்கான ஒதுக்கீட்டில் 17% நிதி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான (UGC) நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ. 6409 கோடியிலிருந்து ரூ. 2500 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 60% க்கும் அதிகமான கடுமையான வீழ்ச்சியாகும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக் கான உதவித்தொகைகள் மற்றும் ஜம்மு- காஷ்மீ ருக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் ஆகியவை PM-USP எனும் திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டம் மாணவர்கள் பெறும் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிற காலத்தில் அதன் வட்டிக்கான மானியத்தையும் உள்ளடக்கி யுள்ளது. பல திட்டங்களை ஒரே திட்டத்தில் இணைப்பது, குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் உண்மையான செலவினத்தைக் கண் காணிப்பதையும், அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வதையும் கடினமாக்குகிறது எனவும் இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு சுட்டிக்காட்டி யுள்ளது.
குழந்தைகள் மீது தாக்குதல்
இந்தியாவின் குழந்தைகள் 36% வளர்ச்சி குன்றியவர்களாகவும், 32% குறைந்த எடை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிற உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பிரச்சனைகள் இருந்தபோதிலும், 2024 பட்ஜெட் இவை போன்ற முக்கியப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வில்லை. இளம் தாய்மார்கள் மற்றும் குழந்தை களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதிலும், குழந்தை களின் பிற்கால கல்வி செயல்பாட்டுக்கு மிக அவசிய மான அவர்களின் முன்பருவக் கல்வியை வழங்கு வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அங்கன்வாடி களுக்கான நிதி 1.5% குறைக்கப்பட்டுள்ளது. 2023 பட்ஜெட்டில் (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்) ரூ. 21,523 கோடியாக இருந்த அங்கன்வாடிகளுக்கான நிதி 2024-25 பட்ஜெட்டில் ரூ. 21,000 கோடியாக குறைக்கப் பட்டுள்ளது. ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் அங்கன்வாடி மையங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்ற போதிலும், அவற்றின் உட்கட்ட மைப்பு மற்றும் திறனை மேம்படுத்துவதை அரசாங்கம் முன்னுரிமையாக கருதவில்லை என்பதை இந்த நிதிவெட்டு சுட்டிக் காட்டுகிறது.
2023 பட்ஜெட்டில் (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்) ரூ.10,000 கோடியாக இருந்த பிரதம மந்திரி போஷான் திட்ட (மதிய உணவுத் திட்டத்தை உள்ளடக்கியது) நிதி ஒதுக்கீடு 2024-25 பட்ஜெட்டில் ரூ.12,467.39 கோடியாக அதிகரித்துள்ளது. எனினும், 2022ல் ஒதுக்கப்பட்ட ரூ.12,680.97 கோடியுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு குறைவானது தான். அங்கன்வாடிகளுக்கான நிதி குறைப்பைப் போலவே, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்வதில் அரசாங்கம் முனைப்பாக இல்லை என்பதை பிரதம மந்திரி போஷான் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு பிரதிபலிக்கிறது. நாட்டின் குழந்தை கள் எதிர்கொள்ளும் தீவிர ஊட்டச்சத்து குறை பாட்டுப் பிரச்சனைகளைச் சமாளிக்க தேவையான வலுவான ஆதரவை முக்கியமான ஊட்டச்சத்துத் திட்டங்கள் பெறவில்லை என்பதை இந்த இரண்டு திட்டங்களுக்கான நிதிவெட்டுக்கள் குறிக்கின்றன. இதுகவலைக்குரிய போக்காகும்.
இந்தியாவில் 7 கோடி குழந்தைகள் அடிப்படை யான எழுத்தறிவும் எண்ணறிவும் பெறாமலேயே ஆரம்பக் கல்வியை முடிக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய மோசமான கற்றல் விளைவுகளுக்கு பற்றாக்குறையான பள்ளி உட்கட்டமைப்புகள் கணிசமான அளவுக்கு காரண மாகின்றன. மனித வள முன்னேற்றத்துக்கான நாடாளு மன்ற நிலைக்குழுவின் அறிக்கை 44% சதவீத அரசுப் பள்ளிகள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்த இடைக்கால பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு கணிசமான அளவு பட்ஜெட் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பொதுக் கல்விக்கு 20%; தொழில்நுட்பக் கல்விக்கு 22% குறைக்கப் பட்டுள்ளது. இந்த நிதிவெட்டு மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வியின் தரத்தை பராமரிப்பதில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள இருக்கும் என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
6 சதவீத நிதி எப்போது கிடைக்கும்
கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கான நிதி ஒதுக்கீடும், அரசுச் செலவினமும் படிப்படியாகக் குறைந்து வரு கிறது. குறிப்பாக 1960-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் பரிந்துரைத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 6% கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்பதை தொடர்ச்சி யாக வலியுறுத்திவந்த போதிலும் 2024 பட்ஜெட் இந்த தொடர் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான இலக்கிலிருந்து மிகவும் விலகியே இருக்கிறது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழ கங்களில் நிதியில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்வி நலன்களை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது.
மொத்தத்தில், இது அப்பட்டமான மாணவர் விரோத -குழந்தைகள் விரோத பட்ஜெட் ஆகும்.
கோ.அரவிந்தசாமி
மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்